சென்னை: பொதுமக்கள் அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பிறப்பித்த உத்தரவு:
பொதுவாக அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணைப்படி அதிகாரிகள் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதும் இல்லை, பதிலளிப்பதும் இல்லை.
இதனால் அரசுக்கு அளித்துள்ள மனுக்களை பரிசீலிக்கக்கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இனி பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசுக்கு அளிக்கப்படும் மனுக்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.