திருச்சி: பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் என்னவாயிற்று, மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே என்று திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் நேற்று தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய விஜய், மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது: அந்தக் காலத்தில் போருக்கு போகும் முன்பு வெற்றிக்காக குலதெய்வ கோயிலுக்குச் செல்வார்கள். அதுபோல, தேர்தலுக்கு முன் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நல்ல விஷயங்களை திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும் என்பார்கள். தேர்தலில் போட்டியிடலாம் என 1956-ல் அண்ணா முடிவெடுத்தது திருச்சியில்தான். எம்ஜிஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்தியதும் திருச்சியில்தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. பெரியார் வாழ்ந்த இடம் இது. மதச் சார்பின்மைக்கும், நல்லிணக்கத்துக்கும் பெயர்போன இடம். கொள்கை உள்ள மண் இது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,மாதாந்திர மின் கட்டணம் கணக்கீடு, கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்புவது போன்ற பல வாக்குறுதிகள் என்னவானது?
இதுபோல கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாலும், திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே? திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி… ஓசி..’ என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 தருவதில்லை. கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை தவெக செய்துகொடுக்கும்.
பெண்கள் பாதுகாப்பிலும், சட்டப் பிரச்சினைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ, அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
ரசிகர்கள் அதிருப்தி… விஜய் பேசத் தொடங்கியவுடன் மைக் சரியாக வேலை செய்யாததால் அவர் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். இதனால், பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள் அதிருப்திஅடைந்தனர். முன்னதாக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் நேற்று காலை 9.40 மணியளவில் திருச்சி விமான நிலையம்வந்தார். அவரை வரவேற்க விமானநிலையம் முதல் மரக்கடை வரைசாலையின் இருபுறமும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
இதனால், அவர் 8 கி.மீ. தொலைவைக் கடக்க சுமார் 5 மணி நேரமானது. இதனால், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காலை 10.30 மணி முதல் 11 மணி வரை காவல் துறையினர் அனுமதித்திருந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்குத்தான் அவரால் பேச முடிந்தது.
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி: திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்தபோது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், மரக்கடை பகுதியில் உள்ள கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் மீது தவெக தொண்டர்கள், ரசிகர்கள் ஆபத்தான முறையில் ஏராளமானோர் ஏறி நின்றிருந்தனர்.
கூட்ட நெரிசலில் புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்தனர். சையது முர்துசா பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் சீட் மீது ஏறி நின்ற 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.