சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார். ரூ.10 லட்சம் விருதுத் தொகை, சான்றிதழும் வழங்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் விருதும், துளசிமதி முருகேசனுக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டன. விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கமும் வழங்கப்பட்டது.
நல்ஆளுமை விருது: பின்னர், பல்வேறு பிரிவுகளில் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்ன குமார், வட்டாட்சியர் ப.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.யமுனா விருது பெற்றனர்.

கட்டிட வரைபட அனுமதியை எளிதாக்கிய பிரிவில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்க இயக்குநர் பா.கணேசன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் திட்டங்களை செயல்படுத்திய பிரிவில் துறை செயலர் க.லஷ்மி பிரியா, ஆதிதிராவிடர் நல ஆணையர் த.ஆனந்த், பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ச.அண்ணா துரை, தாட்கோ இயக்குநர் க.சு.கந்தசாமிக்கும் முதல்வரின் நல்ஆளுமை விருது (குழு) வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடம் – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தை அமைத்ததற்காக நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா.செல்வராஜ், தமிழ் மொழியை உலக அளவில் மேம்பட முயற்சி எடுத்த தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இணை இயக்குநர் ஆர்.கோமகன் ஆகியோருக்கு நல் ஆளுமை விருதை (அமைப்பு) முதல்வர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த வகையில் திருச்சி குமரவேல் சண்முகசுந்தரத்துக்கு சிறந்த மருத்துவர் விருது, எக்காம்வெல் மறுவாழ்வு மையத்துக்கு சிறந்த நிறுவனம் விருது, கோவை குணசேகரன் ஜெகதீசனுக்கு சிறந்த சமூக பணியாளர் விருது, பெல் பிரின்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணி அமர்த்தியதற்கான விருது ஆகியவற்றை முதல்வர் வழங்கினர்.
மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டு புரிந்தவர்களுக்கான விருதுகள் பிரிவில், சென்னை பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டம் க.மாரிமுத்து ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகர் விருது, சென்னை கருணாலயா சமூக சேவை நிறுவனம், திருச்சி சொசைட்டி ஃபார் எஜுகேஷன் வில்லேஜ் ஆக்ஷன் & இம்ப்ரூவ்மென்ட் நிறுவனத்துக்கு சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சிகளுக்கான முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம் என்ற பிரிவில் 6-வது, 13-வது மண்டலங்களுக்கு முதல் மற்றும் 2-வது பரிசு வழங்கப்பட்டது. சிறந்த மாநகராட்சி பிரிவில் ஆவடி, நாமக்கலுக்கு முதல் மற்றும் 2-வது பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த நகராட்சிகளாக ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூர், சிறந்த பேரூராட்சிகளாக உத்திரமேரூர், காட்டுப்புத்தூர், நத்தத்துக்கு முதல் 3 பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் விழுப்புரம் சந்துருகுமார், திருநெல்வேலி ஜெயக்குமார், சேலம் மாரியப்பன், பெண்கள் பிரிவில் சென்னை காஜிமா, புதுக்கோட்டை லாவண்யா, கிருஷ்ணகிரி கவுரி ஆகியோர் விருது பெற்றனர். பின்னர், முதல்வருடன் விருதாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.