சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அக்.13-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றன.
அதன்பின், மார்ச் 14-ம் தேதி தமிழக அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து கடந்த மார்ச் 24-ம் தேதி துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப்.29-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, ஏப்.29-ம் தேதி பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு பேரவைக் கூட்டம் முடிவுற்றால் அடுத்த கூட்டம் 6 மாதங்களில் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில், வரும் அக்.14-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார். அன்றைய நாள் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை தள்ளிவைக்கப்படும். மேலும், கூடுதல் செலவினங்களுக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் அக்.13-ம் தேதி பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, பேரவை நிகழ்வுகள் நடைபெறும்.