சென்னை: பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய கல்லூரி காலத்தில் பெண் வழக்கறிஞர் ஆண் நண்பருடம் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப் படங்கள் இணைய தளங்களில் பரப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்தக் காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது என மத்திய அரசு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்யப்பட்டது.
மேலும், பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, பெண் வழக்கறிஞர் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.