சென்னை: பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் ஆகியவை சார்பில், ‘கண்ணியமும் நியாமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம், சென்னை தி.நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து, நியாயமான பணிச்சூழல்கள், நல்ல ஊதியம், சட்டப்பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான வலுவான சட்டத்தை தமிழகத்தில் இயற்ற வலியுறுத்தி அமைச்சர் கீதா ஜீவனிடம், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: பொதுவாகவே பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் எங்கேயும் கிடைத்ததில்லை. ஆனால், புதுமை பெண்கள் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என பெண்களை மையப்படுத்தி அதிகளவிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனையை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளார்.
அதேநேரம், சமூக மாற்றமும் ஏற்பட வேண்டும். பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கவும்வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதிகளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே பிள்ளைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண்சமுதாயம் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், சசிகாந்த் செந்தில் எம்பி, தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நலஅறக்கட்டளை தலைவர் ஜோசபின் அமலா வளர்மதி, அறங்காவலர் எஸ்கலின் மிராண்டா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலர் எஸ்.வெங்கடலட்சுமி, தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர் நல வாரியத்தின் செயலர் டி.தர்மசீலன், ஜெ.கருணாநிதி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.