சென்னை: சென்னையில் இருந்து 160 பேருடன் பெங்களூரு புறப்பட்ட விமானத்தில், திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு புறப்பட்டது. 160 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர்.
விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வந்து தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, 8.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டட்து. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, இரவு 10 மணிக்கு பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.