புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி, கடத்தப்பட்ட சிறுவன் மனுதாரரின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்படவில்லை என்றும், இந்த கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதற்கிடையே ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டிருந்தால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் உத்தரவாதம் பெற்று ரூ.25,000-க்கான பிணைப் பத்திரத்துடன் அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் அங்கிருந்த தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது.
இந்த கடத்தலுக்கு கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியும், போலீஸ் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் ஆகியோரும் உதவியதாக கூறப்படுகிறது. அதையடுத்து போலீஸார் ஜெகன்மூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் இருவரிடமும் போலீஸார் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.