சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன் 24, 25-ம் தேதிகளில் 42 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல் நாளான நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் காலையும் பின்னர் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளை பிற்பகலிலும் பழனிசாமி சந்தித்தார்.
இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், அனைவரும் இப்போது இருந்தே தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அப்போது பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று பழனிசாமி தெரிவித்தார். மேலும் கூட்டணி விவகாரம் தொடர்பாக நான் பார்த்து கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்காக, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, சமூக வலைதள பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இரண்டாம் நாளாக இன்று காலை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.