சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரி நகர் மனை பிரிவுகளுக்காக சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், பொதுமக்களின் வசதிக்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.