தாம்பரம், வண்டலூர் வட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரிடம் பட்டா பெற்றுத் தருவதாக கூறி வசூல் நடைபெறுவதாகவும், அப்பாவி மக்களை மோசடி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. சென்னையை சுற்றியுள்ள, 532 கிராமங்களைச் சேர்ந்த, 29,187 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்; தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 57,084 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், இதனையொட்டி வழிகாட்டி விதிகள், நடைமுறைகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி தரிசு நிலம், கல்லான்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை – புஞ்சை, அரசு அனாதீனம், பொதுகல் வகைபாட்டு நிலங்களில் வசிப்போர் பட்டா பெறலாம். வண்டிப்பாதை, பாதை, பாட்டை, களம், மயானம், தோப்பு வகைப்பாட்டில் உள்ள நிலங்களில் வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் நீர்நிலை, மேய்க்கால், மந்தவெளி உள்ளிட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டா வழங்கப்படும் என்பதை பயன்படுத்தி ஒருசில இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த் துறையைச் சேர்ந்த சிலருடன் இணைந்து, 1 பட்டாவுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: யார், யாருக்கு பட்டா வழங்கப்படும் என அரசு தெளிவாக வரையறை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தான் வசிக்கும் பகுதி எந்த நிலத்தில் இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும், பட்டா வழங்குவது ஏற்கெனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது; தொடர்ந்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.
அரசு தெரிவித்த விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இதுபோன்ற இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். பட்டா வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை எனில் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முக சுந்தரம் கூறியதாவது: பட்டா பெறுவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தாலே எளிதாக பட்டா கிடைத்துவிடும். ஆனால், அரசு அதிகாரிகளை அணுகவிடாமல் உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் இடையூறு செய்து பண வசூலில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வண்டலூர், தாம்பரம் வட்டங்களில் புறம்போக்கு நிலங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களை குறிவைத்து இடைத்தரகர்கள், ஆளுங்கட்சியினர், வருவாய்த்துறையைச் சேர்ந்த சிலர் இணைந்து வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவற்றை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். பட்டா யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்ற போதிய விழிப்புணர்வு இல்லாததே இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்க காரணமாக அமைகிறது.
அனைத்து விஏஓ அலுவலகங்கள், வருவாய் அலுவலர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு இது குறித்து விளம்பரப்படுத்த வேண்டும். அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதுபோல, பட்டா வழங்குவதற்கான நடைமுறைகளை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி அரசு கொண்டு வந்த இந்த நல்ல திட்டத்தை அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.