சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்சி, குடிநீர் வாரிய பணிகளுக்கான சாலை தோண்டும் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தியும், நிலத்துக்கு அடியில் மின் கம்பிகளை புதைவடங்களாக பொருத்தியும் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இதில், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன.
குறிப்பாக, சென்னை மாநகர் முழுவதும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதை மின்வடங்கள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் பணிகளுக்கு சாலை தோண்டும் போது, பல இடங்களில் புதை மின்வடங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
சேதமாகும் மின்வடங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே விட்டு செல்லப்படுவதால், மழைக் காலங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணகி நகரில் பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் சேதமடைந்த புதைமின் வடங்களை கணக்கெடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தடுக்க சாலைகளில் பள்ளம் தோண்டும் பணிகளை மின் வாரிய பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மின் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் மின் விபத்தை ஏற்படுத்தும் வகையிலான புதைமின் வடங்கள் மற்றும் மின்விபத்து பகுதிகளைக் கண்டறிய தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இந்தக் குழுக்கள் நடத்திய ஆய்வில், 700 புதைமின் வட சேதங்கள் உட்பட பழுதடைந்த மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகள் என, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டன.
இதில், புதை மின்வட சேதங்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட மின் உபகரண சேதங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் மீதமுள்ள சேதங்களும் சரிசெய்யப்பட்டு மின் விபத்து உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்படும். மேலும், தற்போது மாநகராட்சி, குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் சாலை தோண்டும் பணிகளுக்கு முன் மின் வாரியத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இருப்பினும், பணிகளின் போது புதைமின் வடங்கள் சேதப்படுகின்றன.
இனி வரும் நாட்களில் சாலை தோண்டும் பணியையும் மின் வாரிய பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளவும், அந்த சாலை தோண்டும் பணிக்கான செலவை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து மின் வாரியம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.