புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
புதுவை சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக பேரவைத்தலைவர் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்து,பேரவை முன்பு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார். அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுவையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பேரவைத்தலைவர் செல்வம், முதல்வருடன் கலந்து பேசி பேரவையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் இதர எம்எல்ஏக்கள் மைக்குகள் அணைக்கப்பட்டன.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் பேசினார். இந்த நேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, தனது இருக்கையிலிருந்து வெளியேறி, முதல்வர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனால் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவையை நடத்த இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரவைத்தலைவர் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித் தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார். அதைத்தொடர்ந்து , திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேச்சை எம்எல்ஏ நேரு ஆகியோரையும் சபையிலிருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது. பேரவை நிகழ்வுகல் 45 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதன்பிறகு எம்எல்ஏக்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.