புதுச்சேரி: கட்சிக்குள் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில், புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். புதுச்சேரியில் 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. தேஜக கூட்டணியின் புதுச்சேரி தலைவரான ரங்கசாமி முதல்வரானார். இரு கட்சிகளுக்கும் தலா இரு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
பாஜகவைச் சேர்ந்த செல்வம் பேரவைத் தலைவராகவும், அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசனுக்கு நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஆகியோர் அமைச்சர் அல்லது வாரியத் தலைவர் பதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்தனர். வேறு சிலர் நியமன எம்எல்ஏ பதவிகளை கேட்டு வந்தனர். பதவி வழங்காததால் கட்சிக்குள் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர். பின்னர், சாய் ஜெ.சரவணன்குமார் முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
தொடர்ந்து, ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்தார். பின்னர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் ஜெ.சரவணன்குமார் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அவர் ராஜினாமா செய்தது, பாஜக உட்கட்சி விவகாரம்” என்றார். ராஜினாமா குறித்து சாய் ஜெ.சரவணன்குமாரிடம் கேட்டதற்கு, “பிரதமரின் உத்தரவுப்படி எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.
புதிய அமைச்சர்… இதற்கிடையில், நியமன எம்எல்ஏக்களான ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் பேரவைத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அவர்களுக்குப் பதிலாக காரைக்கால் தொழிலதிபர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், மூத்த நிர்வாகி முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்படலாம் என்றும், பாஜக சார்பில் புதிய அமைச்சராக எம்எல்ஏ ஜான்குமார் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.