சென்னை: புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய டிஜிபி தேர்வு போட்டியில் டிஜிபி-க்களான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஜூனியரான நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர் உள்பட 8 பேரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதன் இறுதி பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் ஒருவர் விரைவில் தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி-யான சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.