சென்னை: “6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை சிதம்பரம் சொல்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரியங்கா காந்தி அங்கிருந்து வந்து வயநாட்டில் போட்டியிடும் போது, வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன?
2026 சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் தோல்வி தெரிவதால் சிதம்பரம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் இப்போதே கதை சொல்ல தொடங்கி விட்டனர்” என்றார் தமிழிசை.
ப.சிதம்பரம் கூறியது என்ன? – “பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாக 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை ஆகும்.
இது தென் மாநில மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது போன்றது ஆகும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்தக் கருத்து தவறானது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.