தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 25) திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சுமார் 2 ஆயிரம் போலீஸார் 5 அடுக்குகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் நாளை இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த பின்னர், செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுகிறார். பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகளை திறந்து வைக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது உலையில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். விழா முடிந்த பிறகு இரவு 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் பங்கேற்கும் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீஸார் 5 அடுக்குகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, 3 ஆய்வாளர்கள் மற்றும் 75 போலீஸார் 24 மணி நேரமும் படகில் ரோந்து சென்று, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ட்ரோன்கள் மூலம் கண்காணி க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி மகேஷ்குமார் கூறினார்.