சென்னை: பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேச வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவைச் சேர்ந்த அன்புமணி, தன் தந்தையான ராமதாஸை எதிர்த்து தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.
வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என்று முழக்கமிட்டிருக்கிறார்.
அன்புமணி அவர்கள் கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து விவரம் தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார். மறைந்த கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கருணாநிதி, மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நான் இந்த துறைக்கு அமைச்சராக இருந்தபோது, பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல் ஆகிய இடங்களிலும் கவுண்டன்யா நதியில் ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பென்னையாற்றில் பரமசாத்து, பொன்னை, குகையநல்லூர் ஆகிய இடங்களிலும் தடுப்பணைகள் கட்டினேன்.
இதுதவிர பாம்பாற்றில் மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில் கரியகூடல், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடி, மலட்டாற்றில் நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில்- பெரியாங்குப்பம், கானாற்றில் சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளேன். இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி- செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணி இனிமேலாவது பேசும்முன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.