விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் கட்சியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான திருமால்வளவன் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “அரசியலைக் கடந்து ‘அய்யா’ என்ற மாபெரும் போராளியை நீண்ட நாட்களுக்கு பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
அவரிடம் அரசியல் கற்ற நான், நன்றி உணர்வுடன் சந்திக்க வந்துள்ளேன். அவரை சந்தித்தது, அரசியல் உள்நோக்கம் இல்லை. பாமகவில் இருந்து பிரிந்து சென்ற நாங்கள், அவருக்கு மனமகிழ்வை தர வேண்டும் என்பதற் காக சந்திக்க வந்துள்ளேன். பெரியாருக்கு பிறகு சமூக நீதிக்காகபோராடுபவர் ராமதாஸ். ராமதாசை நான் சந்திக்க வந்துள்ளதால், தைலாபுரத்துக்கு அன்புமணியும் வந்துவிடுவார். இதற் காகவே, ராமதாஸை சந்திக்க வந்தேன்” என்றார்.
இதற்கிடையே அன்புமணியுடன் ஏற்பட்டுள்ள மோதலை சமாளிக்க ராமதாஸ் புது வியூகம் அமைத்துள்ளதாகக் கூறப்படு கிறது. அதன்படி பாமகவில் இணையுமாறு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது சகோதரர் திருமால்வளவன் திடீரென ராமதாசை சந்தித்துள்ளார்.
மேலும், காடுவெட்டி குருவின் மகன் கனலரசனுடனும், பாமகமூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் அன்புமணியின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள தாகவும் தைலாபுரம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.