சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அரிய நூல்கள், நாட்டுடைமை நூல்கள், மூத்த வரலாற்று அறிஞர்களின் தமிழ்நாட்டு வரலாறு அரிய நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் 26 புதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 821 பொது நூலகங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.213.46 கோடி அனுமதிக்கப்பட்டது. இதில் தற்போது, ஊரக வளர்ச்சித்துறை மூலம் 90 நூலகங்கள், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 32 நூலகங்கள், நகராட்சி நிர்வாகத் துறை மூலம் 20 நூலகங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் ரூ.31.24 கோடியில் நூலக கட்டிடங்கள், ரூ.2.84 கோடியில் நூல்கள், ரூ.2.05 கோடியில் தளவாடங்கள், ரூ.78 லட்சத்தில் கணினி தொடர்புடைய சாதனங்கள் என ரூ.36.92 கோடியில் நூலகங்கள் தயாராகியுள்ளன. மேலும், கோயம்புத்தூர் – பெரியநாயக்கன்பாளையம், ஈரோடு – கோபிசெட்டிபாளையம், ஆலாம்பாளையம், அரியலூர் – ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் ரூ.2.41 கோடியில் 4 நூலகங்கள் என ரூ.39.33 கோடியில் 146 நூலக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் 4 தளங்களுடன் ரூ.4.01 கோடியில் கட்டப்பட உள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் சரவணன், உறுப்பினர் – செயலர் உஷாராணி,பொது நூலக இயக்குநர் ஜெயந்தி, இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் பங்கேற்றனர்.