சென்னை: பாஜக மாநில நிர்வாகிகள் தேர்வுக்காக, ஒரு பதவிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார்.
தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநில அளவிலான பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தமிழக பாஜக மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
அந்த வகையில், 8 மாநில துணை தலைவர்கள், 8 மாநில செயலாளர்கள், 4 மாநில பொதுச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் பதவி என 21 பதவிகளுக்காக தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார்.
அதன்படி, தமிழக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் ஆதரவாளர்களின் பெயர்கள் அதிகளவில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்து 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயார் செய்து, டெல்லியில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார்.
தனது கட்சியுடன் பாஜகவில் இணைந்த சரத்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்பு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, கே.டி.ராகவன் உள்ளிட்டோரும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்கும் மாநில நிர்வாகி பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஏற்கனவே, மாநில துணை தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு அதே பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட இருக்கிறது. ஒரு சிலர் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட உள்ளனர். கட்சிக்கு உழைக்க கூடியவர்கள், அந்தந்த சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், தங்கள் தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் திறன் உடையவர்கள், தேர்தலில் வெற்றி பெறும் தகுதி உடையவர்கள், நேர்மையாக சட்டப்பேரவை தேர்தலுக்கு தொண்டர்களை வழி நடத்தக் கூடியவர்கள் என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், இந்த பட்டியலை நயினார் நாகேந்திரன் தயார் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் அனைத்து சாதிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், பதவிக்கு மூன்று பேர் வீதம் என நயினார் நாகேந்திரன் வழங்கிய பெயர் பட்டியலில் இருந்து 21 பேரை தேர்வு செய்யும் வகையில், தேசிய தலைமை ஆலோசனை மேற்கொண்டு, விரைவில் இறுதி பட்டியலை வெளியிட இருக்கிறது.