பிஹாரில் இண்டியா கூட்டணி எடுபடவில்லை. கூட்டணியின் பெயரையும் மகாகட்பந்தன் என மாற்றினர். அவர்களது தோல்வி அங்கேயே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பு பிஹாரில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிந்தவுடன், புதிதாக ஏதாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆரை கையில் எடுத்து பூதாகரமாக்கினர். எஸ்ஐஆர்தான் அவர்களது பிரச்சாரத்தின் மையப்பகுதியாக இருந்தது. மக்களின் குறைகளையோ, மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதையோ அவர்கள் பேசவே இல்லை. எஸ்ஐஆரை ஆயுதமாக்க நினைத்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது.
அதேநேரம், கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், உள்ளூர் பிரச்சினைகளை சரியாக அணுகுவதிலும் பாஜக மிகத் தெளிவாக இருந்தது. இதனால், வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகள் வாக்குத் திருட்டு என பொய்யாக குற்றம்சாட்டுகின்றனர். பிஹாரில் முஸ்லிம்கள், யாதவர்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

