சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங் களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
20 ஆயிரம் ஆசிரியர்கள்: அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டிட்டோஜேக் அமைப்பினர் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னையில் டிபிஐ வளாகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஏராளமான ஆசிரியர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
இதுதவிர மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தும் எதிர்ப்பை காட்டினர். இதனால் கணிசமான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து டிட்டோ ஜேக் சார்பில் இன்றும்(ஜூலை 18) மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப் படும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாற்று ஏற்பாடு தீவிரம் இதற்கிடையே போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கு அறிவுறுத்தல்கள் வழங் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.