நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்றும், நாளையும் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 19, 20, 21-ம் தேதிகளில் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிகள், இன்று நாமக்கல், பரமத்தி வேலூர், நாளை திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் மக்களிடையே பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது சுற்றுப்பயணம் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சுற்றுப்பயணம் அக். 4, 5-க்கு மாற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.