சென்னை: பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 3 நாள் ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளையும், பாரம்பரியமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: கலை என்பது மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய கலை வடிவங்களை இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதிதிராவிட மக்களுடைய நாட்டுப்புற பாடல்கள் எல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான குரல்களாக இருந்திருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களை கேட்டோம் என்றால், சமூகக் கொடுமைகள், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றிய ஹீரோக்களை அறிந்து கொள்ளலாம்.
அடித்தட்டு மக்களின் பாடலாக இருக்கட்டும், நடனமாக இருக்கட்டும், இலக்கியமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், அதில் ஒருவிதமான ஏக்கம், கோபம், எதிர்பார்ப்பு எல்லாமே இருக்கும். அடித்தட்டு மக்களுடைய கலைகளில் இருப்பவைதான் தமிழகத்தினுடைய உண்மையான வரலாறு. மற்றவர்களைவிட கலைக்கும், கலைஞர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதிகமாக கிடைக்கும். ஆனால் அனைத்து கலைஞர்களுக்கும் சமமான இடம் கிடைக்கிறதா என்றால் இல்லை.
உயர்தட்டு மக்களுடைய கலைகளுக்கு ஒரு மதிப்பு. உழைக்கின்ற, ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுடைய கலைகளுக்கு வேறு மாதிரியான மதிப்பு நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை உடைக்கும் முயற்சிகளை தொடர்ந்து திமுக அரசு எடுத்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஆதிதிராவிடர் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இலக்கியப் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பழங்குடியின மக்களுடைய மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த சேவைகளையும் அரசு செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் நா.இளையராஜா, துறை செயலர் க.லட்சுமி பிரியா, ஆணையர் த.ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.