சென்னை: ‘பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்’ என அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினராக எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான். அதை ஏற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய திட்டம்தான் நாட்டுக்கே வழிகாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகளை திமுக ஆட்சியில் இயக்கி வருகிறோம். போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும், துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.