சென்னை: அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்தது.
அரசின் பள்ளிக் கட்டிடங்களை யார் கட்டினாலும், யார் திறந்து வைத்தாலும் கட்டிடங்களின் தரமானது ஒதுக்கிய மதிப்பீட்டுக்கு ஏற்ப சற்றும் குறையாமல் இருக்கவேண்டும்.
அதைவிடுத்து ஒதுக்கிய மதிப்பீட்டில் லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு கட்டிட வேலை பார்த்தால் தரம் இருக்காது. இவ்வாறு தமிழகத்தில் அரசாங்கத்தால் எந்த ஒரு திட்டத்துக்கும் ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக திட்டத்துக்காக செலவிடப்படாமல் விரயமாகி வருவது ஏற்புடையதல்ல.
எனவே, கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டதா, என்பதை ஆய்வு செய்து, கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.