சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பாக, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து, நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், செல்லு படியாகும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லை என்றால், நமது நாட்டு சட்டப்படி, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையில் இருந்து, கருணை அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடியுரிமைக்கான முதல்படி: நமது நாட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கைத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான, இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான முதல்படியாக இது அமைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் மக்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த அறிவிப்பை வழங்கிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.