சென்னை: பாதுகாப்புக் குழுவினரின் வாகனங்களில் ஏறுவது, குதிப்பது, பயணத்தின்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற கட்சியின் பூத் கமிட்டி முகவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த என்னை அன்பால் நனைய வைத்தீர்கள். உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் எனது அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இளைய தோழர்கள், நமது வாகனங்களை இருசக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. உங்களின் பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். உங்க அன்பை மதிக்கிறேன். அதேபோல நீங்களும் என்மேல் அன்போடு இருப்பது உண்மையென்றால் இனி இதுபோல செய்யக்கூடாது.
ஒழுங்கு நடவடிக்கை குழு: இந்நிலையில், தவெகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுஅமைத்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள நிர்வாகிகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக கட்சியின் தலைவர் விஜய்யே செயல்படுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக, பொதுச் செயலாளர் என்.ஆனந்த், உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.