சென்னை: விஜய் தலைமையில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், கட்சி தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்படும்.
கட்சியின் சட்ட விதிகளின்படி, மாநில செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.