சென்னை: வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பணிபுரியும் வனவர் கார்த்திகேயன் மற்றும் வனக்காவாளர் திவாகர் இருவரும் புதன்கிழமை (மே14) மாலை 06.20 மணியளவில் ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கமலாபுரம் கிராமம் அருகே உள்ள முருகர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 77 -ல், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கர்நாடகா அரசு பேருந்து மோதி வன காவலர் மற்றும் வனவர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட செய்தியை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன். பாதிக்கப்பட்ட வன பணியாளர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும், சாலையில் பயணிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

