சென்னை: சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ஆர்.ஏ.புரம் வரை 7.315 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.31 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்கும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மத்திய பக்கிங்ஹாம் கால்வாய், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும், கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்துகிற வெள்ள நீர் கடத்தி கால்வாயாகவும் செயல்படுகிறது.
இந்நிலையில், பழம் பெருமை வாய்ந்த பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனடிப்படையில், பக்கிங்ஹாம் கால்வாயில், சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ராஜா அண்ணாமலைபுரம் வரை 7.315 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.31 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைத்தனர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்தேக்க திறனை அதிகப்படுத்தும் வகையில், 1 மீட்டர் ஆழத்துக்கு அதிநவீன தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் தூர்வாரப்படுவதன் மூலம் கால்வாயின் வெள்ள நீர் கடத்தும் திறன் வினாடிக்கு 2,500 கன அடியாக உயரும்.
இதன் பயனாக, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் விரைவில் கடலுக்கு சென்றடையும். மேலும், பக்கிங்ஹாம் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி, மரக்கன்றுகள் மற்றும் நடைபாதை அமைத்தல், 4 இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைப்பது ஆகிய அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது,’ என்றனர்.