தமிழகத்தில் நோய் பாதித்த மற்றும் தொற்றுகளை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் கவுரவ செயலாளர் ஆ.சங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: “தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின்படி தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் 3, 65, 318 ஆக இருந்த நாய்க்கடி சம்பவங்கள், 2023- ஆண்டில் 4, 40, 921 ஆக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,24,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.
நாய்க்கடிகளின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 2017-ல் 16 ஆக இருந்தது. 2024-ல் 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வயதுக் குழந்தையும் அடங்கும். எனவே தெரு நாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால் கால்நடை மருத்துவர் சான்று பெற்று நோய் பாதித்த மற்றும் தொற்றுகளை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடடியாக அதிகாரம் வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.