சென்னை: நெல் கொள்முதலுக்கான ரூ.500 கோடி நிலுவையை வழங்கக் கோரி சென்னையில், விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து தேசிய நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்துள்ளது. கொள்முதலுக்கான தொகையை 4 மாதங்களாக வழங்காத நிலையில், இதுகுறித்து சென்னை, அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், அதிகாரிகளை சந்திக்க சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்: அங்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை என கூறி, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அண்ணாசாலையிலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து, அய்யாகண்ணு கூறும் போது, “நெல் அறுத்து 4 மாதங்களாக தொகை வழங்கவில்லை. மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சரோ தங்களுக்கு தொடர்பில்லை என்கின்றனர்.
இழுத்தடிப்பு… மேலும், ரூ.500 கோடிக்கான நெல்லை பெற்றுக் கொண்டு ரூ.126 கோடி தான் தருவதாக கூறியுள்ளனர். அந்தத் தொகையையும் இன்று, நாளை என இழுத்தடிக்கின்றனர். எங்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் 12 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தக் கட்டமாக காவல்துறை, நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்றார்.