சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜரானார். அவர் சாட்சி கூண்டில் ஏறி சத்திய பிரமாணம் செய்து, வாக்குமூலம் அளித்தார். அப்போது, ராபர்ட் புருஸுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ராபர்ட் புரூஸ் தரப்பில், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்று ஆவணங்களாக பதிவு செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ராபர்ட் புரூஸ் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. 19 நிமிடங்கள் ஆவணங்கள் பதிவு தொடர்பாக நயினார் நாகேந்திரன் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, ராபர்ட் புரூஸ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்வதற்காக விசாரணை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.