திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கொலை தொடர்பாக சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தற்போது அவரது தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் பெயர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும். இதனைக் கண்டித்தும் பழக்கம் தொடர்ந்ததால் இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஆணவக் கொலை என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.
இதற்கிடையில் உயிரிழந்த இளைஞர் கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.