சென்னை: ‘கரூர் சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. எனவே, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர்.
உயர் நீதிமன்றத்துக்கு தற்போது தசரா விடுமுறை என்பதால், விடுமுறைக்கால நீதிபதியான தண்டபாணியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று சந்தித்தனர். அப்போது, நீதிபதியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் முறையிட்டதாவது: கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்துபோல தெரியவில்லை.
திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. பிரச்சாரம் நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். நடந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.
இதை கேட்ட நீதிபதி தண்டபாணி, ‘‘சம்பவம் நடந்த இடமான கரூர், மதுரை உயர் நீதிமன்ற எல்லைக்குள் இருப்பதால் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்தால், 29-ம் தேதி (இன்று) பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார். தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அதை தொடர்ந்து, தசரா விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் மனு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, கரூரை சேர்ந்த செந்தில்கண்ணன் என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரன் நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்பு ஆஜராகி, ‘‘கரூர் சம்பவம் குறித்த முழுமையாக விசாரணை நடந்து, இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பது உறுதியாக தெரியும் வரை தவெக சார்பில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என முறையிட்டார். இந்த வழக்கை மாலை 4.30 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார். ஆனால், மனு தாக்கல் செய்யதாமதம் ஆனதால், நேற்று மாலை விசாரணை நடைபெறவில்லை. அதேபோல, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் வழக்கறிஞர் வெங்கட்ராமன், ‘‘கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று நீதிபதி செந்தில்குமாரிடம் முறையீடு செய்தார். இது பொதுநல வழக்காக இருப்பதால், தான் விசாரிக்க இயலாது என்று கூறி, வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.