சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நாளை (ஜூலை 26) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்து, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 26) முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 27-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ, வால்பாறையில் 8 செமீ, சின்கோனா, உபாசி, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தலா 7 செமீ, கோவை மாவட்டம் சோலையாரில் 6 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, மாஞ்சோலை, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.