சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜூலை 21) முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிற்றாறில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, ராதாபுரம், கோவை மாவட்டம் சோலையார், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகம், புத்தன் அணை, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.