சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள காலப்புரான்கோட்டையை சேர்ந்த எஸ்.சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள கொந்தளம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு மற்றும் மயானத்திற்கான செல்லும் வழிப்பாதை உள்ளது. இந்த இடத்தை பலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகளால் பொது மக்கள் மயானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் கே.கார்த்திகேயன் ஆஜராகி, “நீர்நிலை ஆக்கிரமிப்பால் இந்த கிராமத்தில் நீராதாரம் குறைந்துள்ளது. மயானத்துக்கு செல்லும் வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் ஆஜராகி, சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு தரப்பின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், 2 மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.