கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கரூரில் நேற்று விசாரணையை தொடங்கியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர், 6 கி.மீ தொலைவில் உள்ள கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என 40 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று கரூர் வந்தடைந்த நீதிபதி அருணா ஜெகதீசன், நெரிசல் சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்தார். காவல் துறையினரிடமும், அப்பகுதி மக்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அங்கு நடந்த நிகழ்வுகளை காவலர்கள், பொதுமக்கள் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர். அப்போது சிலர் நீதிபதியிடம், ‘‘ஒருசிலரிடம் மட்டும் விசாரணை மேற்கொள்ளாமல், அனைத்து தரப்பினரிடமும் விசாரிக்க வேண்டும். விஜய் பேச வந்தபோது மின்சாரம் திடீரென தடைபட்டது, ஒலிபெருக்கி வேலை செய்யாதது உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு அவர், ‘‘சம்பவம் தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்தும், அனைத்து தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்துவேன்’’ என்று உறுதியளித்தார். பின்னர், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து விசாரித்தார். அப்போது பலர் கதறி அழுதபடி சம்பவம் குறித்து அவரிடம் விவரித்தனர். இதற்கிடையே, கரூரில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்பு தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்குமாறு அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார்.
5 பிரிவுகளில் வழக்கு: பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது பிஎன்எஸ் பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், அவசரம் அல்லது அலட்சிய செயல்கள்), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல்) உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். மதியழகன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் ஆறுதல்: இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.