நாமக்கல்: நாமக்கல் – பள்ளிபாளையம் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குநர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இரு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் கிட்னி விற்பனை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் கிட்னி விற்றவர்கள் யார் யார்? வாங்கியவர்கள் யார்? முறையான ஆவணங்கள் கொடுத்து கிட்னி தானம் பெறப்பட்டதா என்பது குறித்துசிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்தார்.
இதன்படி படிதமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குநர் டாக்டர் வினித் மற்றும் மெடிக்கல் ஆக்ட் துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் மெடிக்கல் ஆக்ட் டிஎஸ்பி சீதாராமன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று நாமக்கல் வந்தடைந்தது.
தொடர்ந்து இன்று காலை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவண சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த பகுதியிலேயே இருந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன் குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.