சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் சென்னை தென்மேற்கு மாவட்டத்தின் தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வடகிழக்கு மாவட்டத்தின் திருவெற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்டு பகுதி, வட்டம், பாகம் அளவில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம், திமுக தலைமையகத்தில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: இங்கு வந்துள்ளவர்கள் எல்லாம் என்னைப் பார்க்க வந்த கூட்டமில்லை. என்னுடன் செயலாற்ற வந்த கூட்டம்; கொள்கைக் கூட்டம். இந்தியாவிலே முதன்முதலாக ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி உருவாக்கப்பட்டது என்றால், அது திமுகவில்தான். புதிய நிர்வாகிகள் எல்லாம் சிபாரிசு இல்லாமல், முழுவதும் தகுதி அடிப்படையில் பல்வேறு கட்ட நேர்காணல், ஆலோசனைக்கு பிறகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேயர்கள் உள்ளிட்டோர் எல்லாம் இளைஞரணியில் இருந்தவர்கள். ஒரு விளையாட்டுப் போட்டியில் நாம் ஈடுபடும்போது முதலில் பயிற்சி பெறுவோம். அதுபோலத்தான் இளைஞரணி. மக்கள் பணிக்கு பயிற்சி அளிக்கக்கூடிய இடம்.
இளைஞரணி சார்பில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நூலகம் என 100-க்கும் மேற்பட்ட நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. திறந்து வைத்தது மட்டும் இல்லாமல் அவற்றை தொடர்ந்து கண்காணிப்புக் குழு மூலம் பராமரித்தும் வருகிறோம். பதிப்பகம் வைத்துள்ள முதல் அரசியல் இயக்கத்தின் அணி திமுகவின் இளைஞரணி.
திமுக ஆட்சியில் மயிலாப்பூரில் 5000 புதிய குடியிருப்புகள், பட்டினப்பாக்கத்தில் புதிய மீனவர் அங்காடி, புதிய கால்பந்து மைதானம், 2 புதிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தியாகராய நகரில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூரில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நெட்டுக்குப்பம் மீன்பிடிப்பு இறங்கு தளம், மீன் பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளன. திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் இளைஞரணி நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது இருந்த கூட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இறுதியாக அவரும் அவரின் ஓட்டுநரும்தான் பிரச்சார வாகனத்தில் இருப்பார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால், கரோனா காலத்தில் மக்களுடன் களப்பணியில் இருந்தது திமுகதான். மக்களுக்காக களப்பணி செய்து உயிரிழந்தவர் சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெ.அன்பழகன். ஒரு கட்சியில் பல சார்பு அணிகள் இருக்கும். ஆனால் அதிமுகவே பல அணிகளாக உள்ளது.
கடந்த தேர்தலில் சிறப்பாக செயலாற்றியதற்காக இளைஞரணி திமுக தலைவரிடம் வாழ்த்து பெற்றது. அதுபோல இந்த தேர்தலிலும் இளைஞர் அணி வாழ்த்து பெற வேண்டும் என்றார். நிகழ்வில் எம்எல்ஏ-க்கள் சென்னை வடகிழக்கு மாவட்டச்செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தென்மேற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர் மதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் உரிமைத் தொகை: ஆர்.ஏ.புரத்தில் அறநிலையத் துறை சார்பில் நேற்று 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய உதயநிதி, ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக 1.15 கோடி பேர் மாதந்தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 40 சதவீத விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி வந்துள்ளன. இதற்காக அத்திட்டத்தில் சில விதிகளை முதல்வர் தளர்த்தியுள்ளார். ஓரிரு மாதங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1,000 நிச்சயமாக கிடைக்கும்’’ என்றார்.