சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், ப.செந்தில்குமார் தெரிவித்தனர். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இந்த திடம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை தொடர்பு அதிகாரியும், மின்வாரிய தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடக்கத்தில் தொற்று நோய்கள் அதிகமாக இருந்தன.
ஆனால், தற்போது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் தமிழக அரசு, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.2-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகம் தாய் சேய் நலன் அனைத்திலும் முன்னிலையில் இருந்தாலும், தமிழகத்தில் குடிசை பகுதி மக்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளிகள் போன்ற சாதாரண மக்கள் தங்களின் உடல் நிலையை மருத்துவரீதியாக முன்கூட்டியே பரிசோதிப்பதில்லை.
மக்கள் தங்களின் உடல் நிலையை நோய் வரும் முன்பே மருத்துவரீதியாக பரிசோதிப்பதில்லை என்பதால் அதை நோக்கமாகவைத்து, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம்.
மாவட்டம்தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்தலாம். இதன்படி மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெறவுள்ளன.
சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் இருக்கும். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிற்பகலுக்குள் வாட்ஸ்அப் மூலம் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும். தேவைப்படுவோர் தொடர் சிகிச்சைக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் செயல்பாட்டை தலைமை செயலாளர் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
இந்த முகாமில் பெயர் பதிவு செய்பவர், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் அவரது உடல்நல விவரங்களை கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயர்தர சிகிச்சை நிபுணர்களும், 5 வகையான இந்திய மருத்துவமுறை நிபுணர்களும் உள்ளனர்.
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர். 20 தொழிலாளர் நலவாரியங்களில் 48.56 லட்சம் பேர் உள்ளனர். அமைப்புசாரா தொழிலில் உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு உடல்நலன், நோய்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் தரப்படும்.
பிப்ரவரி வரை முகாம்: இந்த ஆகஸ்ட் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். பின்னர், தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும். நோயை கண்டறிந்து, நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வது, இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
திட்டத்தின் முதல் கட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவராவ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி.லட்சுமிப்பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.