மானாமதுரை: “மோடிக்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தேன், நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதாலும், அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்ததாலுமே கூட்டணியில் இருந்து வெளியேறினன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், “எடப்பாடியை ஒருபோதும் ஏற்க மாட்டேன்.” என்றும் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை. அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்தார். இவைதான், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம்.
அமித்ஷா, ‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளர்’ என்றுதான் கூறினார். ஆனால், ‘இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர்’ என்று அவர் எங்கும் கூறவில்லை. இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பேன் என்று நானும் ஒருபோதும் கூறவில்லை. அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமான முடிவு. மேலும், அதிமுகவுடன் அமமுக தொண்டர்கள் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும்.
நான் மோடிக்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தேன். நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்ததே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம். அவரால் தான் ஓபிஎஸ் வெளியேறினார். ஓபிஎஸ் உடன் பேசத் தயார் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதில் உண்மையில்லை. அதேபோல், எங்களுக்குப் பின்னால் அண்ணாமலை இருப்பதாக சொன்னால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்.
இப்போது அதிமுகவில் நிலவும் சர்ச்சை தொடர்பாக நிச்சயம் செங்கோட்டையனை சந்தித்துப் பேசுவேன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர். அவரும், அவரை சார்ந்த ஒருசிலரும்தான் தனக்கு வேண்டாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத கூட்டணி அமையும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.