மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மடப்புரம் சம்பவத்துக்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஒருவர் தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைக்கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி, உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கு வருவோரின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. காவல் துறையின் அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: சாத்தான்குளம் படுகொலைபோல, மடப்புரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக காவல் துறையும், முதல்வரும் தலைகுனிய வேண்டும். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: பாலியல் குற்றங்களில் ஈடுபடும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும் காவல் துறையால் தாக்கப்படுவதில்லை. சிறிய குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல் துறை கடுமையாகத் தாக்குவது அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டிலிருந்து 23 பேர் காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்துள்ளனர். ஆனால், முதல்வர் எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
இதேபோல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.