மதுரை: நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாகத் திரும்பபெற வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் இன்று (மே 30) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் சார்ந்து ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இது மிக மோசமான நடைமுறை. பிரிவு 11 -ல் நகைக் கடன் பெறுவோர் நகை வைத்திருப்பதற்கான ஆவணங்களை செலுத்த வேண்டும் என்பதும் மோசமான ஓர் அறிவிப்பு.
மதுரை மாவட்டத்திலுள்ள வங்கிகள் இன்றைக்கு 65 சதவீதம் கடன் என்பதை நகைக் கடன்களாக தான் வழங்கியுள்ளனர். எந்த ஒரு ஆபத்தும் இல்லை. திருப்பி செலுத்துவதற்கான ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், நகைக் கடன் பெறும் காரணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. ஒருவர் தன்னுடைய பிள்ளையின் கல்வி அல்லது விவசாயத்துக்கு கடன் வாங்க முயற்சி செய்வாரா அல்லது கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்களைக் கேட்டு அரசு அலுவலகங்களுக்கு செல்வாரா?
பெரும்பாலும் நகைகளை யாரும் அழிக்க மாட்டார்கள். பல தலைமுறைகள் மாறி, மாறி வரும். இதற்கெல்லாம் ரசீது, ஆவணம் கேட்டால் எப்படி கொடுப்பது? ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக்கு தீர்வு காணவேண்டும் என ஏற்கெனவே டெல்லியில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினோம். இதன்படி, ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்த அறிவிப்புக்கான அறிக்கையை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது முதல் வெற்றி.
ரூ.2 லட்சம் வரை நகை கடன் பெறுபவர்களுக்கு எந்த விதி முறையும் இல்லை என்றும், எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் புதிய நடைமுறை குறித்து அனைவரின் கருத்தையும் கேட்டு ஆய்வு செய்த பின் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இருப்பினும், நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் உடனிருந்தனர்.