சென்னை: இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவற்றின் மூலம் ரூ.18,498 கோடி முதலீடும், ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் மூலமாக மட்டும் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால், முதல்வர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை.
அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 10.62 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடிதான்.
எனவே, முதல்வரின் வெளிநாட்டு பயணங்களின் மூலமாக தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வளவு முதலீடுகள் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.