சென்னை: தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராட உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்களில் ஒன்றுதான் ‘மே’ திங்கள் முதல் நாள். ‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை – பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர”என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.
சிகாகோ நகரில் வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைக் கொடுமைகளைப் புறங்கண்டு – உரங்கொண்டு போராடிய வீர வரலாற்றை நினைவுகூர்ந்திடும் நாள் இந்நாள்.தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹே மார்க்கட் தியாகிகளுக்கு இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்!
காலம் காலமாகப் பாரம்பரியமாக வசந்தகால விழாக்கள் கொண்டாடப்படும் நாளாக இருந்த மே முதல் நாள், 1899-ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு சோசலிச மன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.1990 ஏப்ரல் 30 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் மே முதல் நாளை மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார்.
மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.