மயிலாடுதுறை: இந்தியாவின் நெருக்கடி நிலை காலத்தின் அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் சிறைக்கு சென்ற போராளிகளுக்கு பாராட்டு கூட்டம் பாஜக சார்பில் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் போதைப் பொருள் அதிகமாக உபயோகிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. போதைப் பொருளுக்காக செயல்படக்கூடியவர்கள் சென்ட்ரல் ஸ்கூல், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களை குறிவைக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த கம்பரின் பெயரை மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்துக்கு வைக்க வேண்டும். இல்லையெனில், திமுக ஆட்சி தமிழ் விரோத ஆட்சி என்போம். கோயில் பணத்தை எடுத்து நடத்திய முத்தமிழ் கடவுள் முருகன் மாநாட்டின் இறுதியில், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது ‘இது ஆன்மிக மாநாடு அல்ல’ என்றார். அவர் மீதும், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
2026 மே 31-ம் தேதி திமுக அரசு இருக்காது. திமுகவின் அத்தனை ஊழல் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள். மக்கள் விரோத திமுக அரசுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணிதான். எனவே, இந்த அரசு தேசிய ஜனநாயக கூட்டணியால் முழுமையாக தோற்கடிக்கப்படும் என்றார்.